search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார் தாக்குதல்"

    • பரிமளம் என்பவர் மூலம் 24 மணி நேரமும் மது விற்பனை செய்து வருவதாகவும் தகவல் கிடைத்தது.
    • கடந்த ஆண்டும் போலீசாரை தாக்க முயன்றுள்ள பழைய வீடியோவும் பரவியது.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட் டம் ஆலங்குடியை அடுத்த வானக்கண்காடு கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன். தி.மு.க. பிரமுகரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான இவர் அங்குள்ள டாஸ்மாக் கடையில் அரசு அனுமதியின்றி பார் நடத்தி வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.

    அத்துடன் பரிமளம் என்பவர் மூலம் 24 மணி நேரமும் மது விற்பனை செய்து வருவதாகவும் தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை போலீசாருடன் சென்று அதிரடியாக ஆய்வு நடத்தினார்.

    அப்போது சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டிருந்த பரிமளத்தை மதுபாட்டில்களுடன் பிடித்து போலீசார் அவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றியுள்ளனர். அப்போது அங்கு வந்த மதியழகன், பரிமளத்தை கீழே இறக்கிவிட்டதுடன் போலீசாருடன் வாக்குவாதம் செய்து காலணியை கழற்றி தாக்க முயன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது.

    இதே போல கடந்த ஆண்டும் போலீசாரை தாக்க முயன்றுள்ள பழைய வீடியோவும் பரவியது. போலீசாரை தாக்க முயன்றும், அனுமதி இல்லாமல் பார் நடத்தியும் வந்த மதியழகன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்குவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று இரவு தனிப்படை போலீஸ்காரர் முத்துக்குமார் கொடுத்த புகாரின் பேரில் மதியழகன், பரிமளம் ஆகியோர் மீது பணி செய்யவிடாமல் தடுத்தது, போலீசாரை தாக்க முயன்றது, காலணியை கழற்றி தாக்க முயன்றது உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • வீட்டில் பணம் வைத்து சூதாடியவர்களை போலீசார் விசாரித்துக் கொண்டிருந்தனர்.
    • வீட்டில் திடீரென லைட்டை அணைத்து விட்டனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள புது கொத்துக்காடு என்ற பகுதியில் ஒரு வீட்டில் பணம் வைத்து சூதாடுவதாக கடத்தூர் சப்- இன்ஸ்பெக்டர் பெருமாளுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீஸ்காரர்கள் அன்பழகன், வேல்முருகன் ஆகியோர் திடீர் சோதனை செய்தனர்.

    அப்பொழுது அந்த வீட்டில் பணம் வைத்து சூதாடியவர்களை போலீசார் விசாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டில் திடீரென லைட்டை அணைத்து விட்டனர். பின்னர் வீட்டின் வெளியே கூடியிருந்தவர்கள் திடீரென போலீசாரை சூழ்ந்து கொண்டு தகாத வார்த்தைகளால் பேசியும், சூதாட்டத்திற்கு பயன்படுத்திய சீட்டுக்கட்டு மற்றும் அதில் இருந்த பணத்தை பிடுங்கிக் கொண்டு தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இது தொடர்பாக கடத்தூர் போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் (28), துரைசாமி (54), குமார் (27), சுரேஷ் (30), பிரபு (28), ராமசாமி (38), சந்திரசேகர் (32), பழனிச்சாமி (54), ஆறுமுகம் (50), வெள்ளியங்கிரி (40), முருகன் (35), பழனிச்சாமி (35), வசால் (30), ராதா (35), பொன்னுச்சாமி (40) ஆகிய 15 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரை சூதாட்ட கும்பல் சுற்றி வளைத்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடலோர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் தலைமையில் போலீசார் மண்டபம் ரெயில்வே கேட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • கடல் அட்டை மூட்டைகளுடன் நின்றிருந்த சரக்கு வாகனத்தை அந்த கும்பலை சேர்ந்தவர்கள் உதவியுடன் டிரைவர் ஓட்டி சென்றுவிட்டார்.

    பனைக்குளம்:

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் இருந்து வாகனம் ஒன்றில், அரிய கடல் உயிரினமான கடல் அட்டைகள் கடத்தி வரப்படுவதாக நேற்று அதிகாலையில் கடலோர போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    உடனே கடலோர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் தலைமையில் போலீசார் மண்டபம் ரெயில்வே கேட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்றை நிறுத்த முயன்றனர்.

    ஆனால் அந்த வாகனம் நிற்காமல் சென்றது. இதையடுத்து போலீசார் மற்றொரு வாகனம் மூலம் அந்த வாகனத்தை விரட்டி சென்றனர். போலீசார் அந்த வாகனத்தை விரட்டி சென்ற காட்சி சினிமாவில் வருவது போல் இருந்தது. வேதாளை பகுதியில் அந்த வாகனத்தை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அதனை சோதனையிட்டபோது, சுமார் 40 மூட்டைகளில் 2 டன்னுக்கு மேல் ரூ.1 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் இருந்தது தெரியவந்தது.

    இந்த நிலையில் சற்று நேரத்தில், 80-க்கும் மேற்பட்டோர் அங்கு கும்பலாக வந்தனர். அவர்களை போலீசார் எச்சரித்து, கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால், அதை கேட்க மறுத்து கடலோர போலீசாரை முற்றுகையிட்டு தாக்கினர். மேலும் போலீஸ் வாகனத்தின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதாக தெரிகிறது.

    இந்த தாக்குதலில் 5 போலீஸ்காரர்கள் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நடந்து கொண்டிருந்தபோது, கடல் அட்டை மூட்டைகளுடன் நின்றிருந்த சரக்கு வாகனத்தை அந்த கும்பலை சேர்ந்தவர்கள் உதவியுடன் டிரைவர் ஓட்டி சென்றுவிட்டார். பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்களும் தப்பி ஓடிவிட்டனர்.

    இதற்கிடையே போலீசார் மீது கும்பல் தாக்கியது பற்றி தகவல் அறிந்ததும் அந்த பகுதிக்கு கூடுதலாக போலீசார் வரவழைக்கப்பட்டனர். காயம் அடைந்த போலீசாரை மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    போலீசாரை 80-க்கும் மேற்பட்டவர்கள் தாக்கியதுடன், கடல் அட்டைகளுடன் பறிமுதல் செய்த வாகனத்தை போலீசாரிடம் இருந்து அந்த கும்பல் பறித்துச் சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் குறித்து கடலோர போலீசார் மண்டபம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் வேதாளையை சேர்ந்த செய்யது காசிம் மரைக்காயர், ரியாஸ் அகமது, ஹமீது ராஜா உள்பட 80 பேர் கொண்ட தாக்குதல் நடத்தியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய கும்பலையும், கடல் அட்டைகளுடன் ஓட்டிச்செல்லப்பட்ட வாகனத்தையும், அதன் டிரைவரையும் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    மின்சார ரெயிலில் போலீஸ்காரரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர். #arrest

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு நேற்று மாலை மின்சார ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது.

    ஒரு பெட்டியில் செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் பாட்டுப்பாடி, ஆட்டம் போட்டபடி வந்து கொண்டிருந்தனர். அப்போது, இதே பெட்டியில் பயணம் செய்த ரெயில்வே போலீஸ்காரர் சந்திரசேகர் அந்த மாணவர்களை தட்டிக் கேட்டார்.

    ‘‘மற்ற பயணிகளுக்கு ஏன் இடையூறு செய்கிறீர்கள்? அமைதியாக வாருங்கள்’’ என்று கூறினார். இதனால் போலீஸ்காரருக்கும் மாணவர்களுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

    ரெயில் சிங்கப்பெருமாள் கோவில் அருகே வந்த போது, தகராறு முற்றியது. இதனால் ஆத்திரம் அடைந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் 4 பேர் போலீஸ்காரர் சந்திரசேகரை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து சிங்கபெருமாள் கோவில் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் சந்திரசேகர் புகார் செய்தார். போலீஸ்காரரை தாக்கிய மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    இதையடுத்து செங்கல்பட்டு ரெயில்வே போலீசார் சட்டக்கல்லூரி மாணவர்கள் அஜித், வின்சென்ட், சுமன்குமார், ஷியாம் ஆகியோரை நேற்று இரவு கைது செய்தனர். பின்னர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு செங்கல்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    கைதான 4 மாணவர்கள் மீதும் போலீஸ்காரரை தாக்கியதாகவும், பொது மக்களுக்கு இடையூறு செய்ததாகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. #arrest

    ×